விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அத்தோடு இன்று காலை நினைவிடத்திற்கு வருபவர்களுக்கு விஷால் உணவுகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், “திரையுலகில் மட்டுமல்ல, மக்களிடமும் நல்ல மனிதர் என்று பெயர் வாங்கியவர் விஜயகாந்த். நல்ல அரசியல்வாதி. பொதுவாக ஒருவர் மறைவுக்கு பிறகுதான் எல்லாரும் சாமி என்று அழைப்போம்; ஆனால் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது பலர் அவரை சாமி என்று அழைத்தார்கள். விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி. அவருக்கு இருக்க தைரியம் தான் எங்களுக்கு எல்லாம் ஊக்கம். ஒரு படப்பிடிப்பில் இருக்கும் குழுவில் இருக்கும் அனைவரையும் சரிசமமாக பார்ப்பதுதான் கேப்டன் ஐய்யா. படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் அய்யா என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் அந்த குழுவில் இருக்கும் கடைநிலை ஊழியர் கூட சாப்பிட வேண்டும் என்று கூறி அதைச் செய்தும் காட்டினார். அன்று அவர் செய்ததைத்தான் இன்று நாங்கள் எல்லோரும் செய்துகொண்டிருக்கிறோம். நாங்கலெல்லாம் அப்படி செய்தவற்கு அவர்தான் உதாரணமாக இருக்கிறார்.
சூழ்நிலையால் அவரது மறைவுக்கு என்னால் வரமுடியவில்லை; கடைசியா அவரது முகத்தைப்பார்த்து காலை தொட்டு வணங்கியிருக்க வேண்டும்; ஆனால் முடியாமல் போய்விட்டது. தற்போது கூட நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போதுகூட ‘என்னை மன்னிச்சிடு சாமி’ என்றுதான் அவர் சமாதி முன்பு மண்டியிட்டு வணங்கினேன். நான் அவரது குடும்பத்திற்கு நிறையக் கடன்பட்டிருக்கிறேன். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்; நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும்” எனத் தெரிவித்தார்.