உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த 16ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் இந்திய பிரபலங்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் வித்தியாசமான மாடர்ன் உடையில் கலந்து கொண்டனர். மேலும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேஷ்டி, சட்டையிலும் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்ட குஷ்பு பட்டு புடைவையிலும் கலந்து கொண்டார்.
மே 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் (Midnight Screenings section) பிரிவில் வருகிற 24ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. இதற்காக பிரான்ஸ் சென்றுள்ள அனுராக் காஷ்யப் இப்படம் குறித்து ஒரு சில சுவாரசியமான தகவல்களை ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில், "நான் இந்தப் படத்தை எழுதும்போது நடிகர் விக்ரமை மனதில் வைத்திருந்தேன். பின்பு அவரை அணுகினேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அதனால் வேறொரு நடிகருக்கு சென்றேன். ஆனால் விக்ரமின் செல்லப்பெயரான கென்னடி என்பதை படத்தின் தலைப்பாக வைத்தேன்" என்றார்.
இந்த நிலையில் அனுராக் காஷ்யப் இவ்வாறு கூறியதற்கு நடிகர் விக்ரம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், "இந்தப் படத்துக்கு நீங்கள் என்னை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு நான் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் வேறொரு நடிகர் சொல்லி கேள்விப்பட்டேன். பின்பு உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எந்த மெயிலும் அல்லது மெசேஜும் வரவில்லை என்று விளக்கினேன். நீங்கள் என்னை தொடர்பு கொண்ட ஐடி இப்போது செயலில் இல்லை. அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது நம்பர் மாறிவிட்டது. அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் கூறியது போல், உங்கள் கென்னடி படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஏனெனில் அதில் எனது பெயரும் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். அதோடு அப்படத்துக்காக வாழ்த்தும் தெரிவித்துள்ளார். விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.