மலையாளத்தில் ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான '2018' படம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளதாகப் பேசப்படுகிறது. மலையாளத்தைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
மலையாளத்தில் '2018' என்ற பிளாக்பாஸ்டர் வெற்றியைக் கொடுத்தவர் இயக்குநர் ஜூட் அந்தோனி ஜோசப். கடந்த மே மாதம் வெளியான இப்படத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் மொத்தம் 160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படும் இப்படம், கேரளா திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் பண்ணக் கமிட்டாகியுள்ளார் ஜூட் அந்தோனி ஜோசப். பான் இந்தியா படமாக இப்படம் உருவாக உள்ளதால், ஒவ்வொரு மொழிகளில் இருந்தும் ஒவ்வொரு ஹீரோவைத் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. அந்த வகையில் தமிழில் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் நிவின் பாலியும் கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் நடிக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படகில் நடித்து வருகிறார். இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளது.