இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் என 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது, விஜய்யின் அரசியல் வருகையில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிர்வாகிகளிடம் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.