ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து இவர் இயக்கிய தெறி படம் 2016-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மற்றும் அட்லி கூட்டணியின் மெர்சல், பிகில் என வரிசையாக நீண்டது. தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து, அப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, அவர் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது. இயக்குனர் அட்லீயும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் முயற்சியில் உள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர் அட்லியின் அலுவலகம் உள்ள கட்டிட வளாக பார்க்கிங்கில் நடிகர் விஜய் வலம் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை அங்கிருந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய மொபைல் ஃபோனில் பதிவு செய்து, அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் மற்றும் அட்லி இடையேயான இந்தத் திடீர் சந்திப்பிற்கான காரணம் என்னவாக இருக்குமென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.