இயக்குநர் வெற்றிமாறன், இயக்குவது மட்டுமல்லாமல் 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரிக்கிறார். இதனிடையே 'பேட்டைக்காளி' என்ற இணை தொடரை தயாரிக்கிறார். இந்த தொடர் ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. ராஜ்குமார் இயக்கும் இந்த தொடருக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த தொடரின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் 'பேட்டைக்காளி' தொடரின் ப்ரோமோவை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "தமிழ் திமிரு கொஞ்சம் கூட குறையாம... வர்றான் பாரு பேட்டைகாளி" என குறிப்பிட்டுள்ளார். இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்த இணை தொடர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.