மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது. உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகவுள்ள இப்படம் யு/ஏ சான்றிதழுடன் நாளை (29.06.2023) வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தை தனுஷ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாரி செல்வராஜின் மாமன்னன் எமோஷன் நிறைந்தது. அவருக்கு ஒரு பெரிய பாராட்டு. வடிவேலு மற்றும் உதயநிதி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்துள்ளார்கள். இடைவெளி காட்சிக்கு தியேட்டர் தெறிக்கப் போகிறது. இறுதியாக ஏ.ஆர். ரஹ்மான் அழகாக இசையமைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தனுஷ் பாராட்டுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி தற்போது தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எல்லாவற்றிற்கும் நன்றி தனுஷ். உங்கள் ஆதரவு இல்லாமல் மாமன்னன் சாத்தியமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். கர்ணன் படம் முடிந்த பிறகு துருவ் விக்ரமை வைத்து ஒரு படமும், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படமும் இயக்க திட்டமிட்டிருந்தார் மாரி செல்வராஜ். ஆனால் உதயநிதி தன்னுடைய கடைசி படம் என மாரி செல்வராஜை அழைத்ததால் அவரை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.