maamannan movie release issue

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப்பெற்றது. உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகவுள்ள இப்படம் நாளை (29.06.2023) வெளியாகிறது.

Advertisment

இதனிடையே மாமன்னன் படத்தை வெளியிடத்தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம சரவணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற படத்தில் உதயநிதி நடித்து வந்தார். 80சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சில காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்னும் 20 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் முழுவதும் முடிந்துவிடும்.

Advertisment

ஆனால், மாமன்னன் படத்தை தனது கடைசிப் படமாக உதயநிதி அறிவித்துள்ளார். இதுவரை ஏஞ்சல் படத்திற்கு ரூ. 13 கோடி செலவு செய்துள்ளோம். ஏஞ்சல் படம் முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 8 நாட்கள் கால்ஷீட் கேட்டும் உதயநிதி தர மறுக்கிறார். ஏஞ்சல் படத்தை முழுவதும் முடிக்க வேண்டும் அல்லது இழப்பீடாக உதயநிதி ரூ. 25 கோடி தர வேண்டும். அதுவரைக்கும் மாமன்னன் படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இருவரும் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை இன்று (28.06.2023) ஒத்தி வைத்தது. அதன்படி இன்றைக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இந்த வழக்கு விசாணைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment