விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். அதே பொங்கல் திருநாளை முன்னிட்டு அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'துணிவு' படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிடுகிறார். தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'வாரிசு' படத் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ்நாட்டில் விஜய் தான் முன்னணி ஹீரோ, அதனால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று உதயநிதியை சந்தித்து பேசவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து உதயநிதியிடம் தில் ராஜு விரைவில் பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'வாரிசு' படக்குழுவுடன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது இணைந்துள்ளது. அதன்படி வாரிசு படத்தை தமிழகத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிடும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வடக்கு ஆற்காடு மற்றும் தெற்கு ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.