தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன. முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம், அடாவடி, உயிரிழப்பு, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. இருப்பினும், இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளில் கூடுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் எல்லாம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.
இதையடுத்து துணிவு படக்குழுவும் வாரிசு படக்குழுவும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படத்தின் புது போஸ்டர்களை வெளியிட்டன. வாரிசு போஸ்டரில் 'பொங்கல் வின்னர்' என்றும் துணிவு போஸ்டரில் 'ரியல் வின்னர்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பொங்கல் ரேஸில் தங்கள் ஹீரோக்களின் படம் தான் வெற்றி பெற்றது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வழக்கம்போல கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இரண்டு படங்களையும் தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம், இரு படக்குழுக்களும் 'பொங்கல் வின்னர்', 'ரியல் வின்னர்' என்ற வாசகத்துடன் வெளியிட்ட போஸ்டர்களை அந்த வாசகங்கள் இல்லாமல் வெளியிட்டு "இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் தான். அதனால் அருகில் உள்ள திரையரங்கிற்கு சென்று பார்த்து கண்டுகளியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு படத்தை தமிழகம் முழுவதுமாகவும், வாரிசு படத்தை தமிழ்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட அளவிலான சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய டிஸ்ட்ரிபியூஷன் ஏரியாக்களிலும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.