‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்ததாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. அத்துடன் படக்குழு சிறிய ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது.