'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான 'பிதாமகன்', 'நந்தா' ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, "18 வருடங்களுக்கு பிறகு இன்று பாலா அண்ணன் ஆக்ஷன் என்று கூறுவதை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றேன்" என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பாலா - சூர்யா இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இப்படத்தை விரைந்து முடித்து அடுத்ததாக நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.