சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி. அவர் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் நடந்தது. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'கங்குவா' படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் வாடிவாசல் படத்திற்கு முன்பாக மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில் சூர்யாவின் 43வது படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே தகவல் வந்தது போல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். மேலும் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இந்த படம் இசையமைப்பாளராக 100வது படமாக அமைந்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றுள்ளது. பட தலைப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு போராட்டக் களத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடப்பதாகவும் அங்கு அடிதடி, பாட்டில் உள்ளிட்டவை வீசப்பட்டு அந்த இடமே ஒரு போர்க்களமாக காட்சியளிப்பது போல் ஒரு காட்சியை அடிப்படையாகக் கொண்டு அந்த வீடியோ அமைந்துள்ளது.
ஏற்கனவே சூர்யா- சுதா கொங்கரா - ஜி.வி. பிரகாஷ் ஆகிய மூவரின் கூட்டணியில் முதல் படமாக வெளியான 'சூரரைப் போற்று' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட அப்படம் 68வது தேசிய விருது விழாவில் 5 விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.