அஷிமா சிப்பர் இயக்கத்தில் ராணி முகர்ஜி நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே'. ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் நாளை (17.03.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒரு தம்பதி வேலைக்காகத் தனது இரண்டு குழந்தைகளுடன் நார்வே நாட்டிற்குச் செல்கின்றனர். அங்கு அவர்களின் இரண்டு குழந்தைகள் சரியாக வளர்க்கப்படவில்லை எனக் கூறி அங்குள்ள ஒரு குழந்தைகள் அமைப்பு எடுத்துச் சென்று விடுகிறது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கணவரிடம் இருந்து பிரிந்து விடுகிறார் சகரிகா பட்டாச்சார்யா. இதன் பிறகு அந்த குழந்தைகளை மீட்டெடுத்தாரா வழக்கில் ஜெயித்தாரா என்பதைப் பற்றி விரிவாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூர்யா இப்படத்தை பாராட்டி வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உண்மைச் சம்பவத்தைப் பற்றி பேசும் முக்கியமான படம் இது. படம் பார்த்த பிறகு ஜோதிகாவும் நானும் கனத்த இதயத்துடன் வெளியில் வந்தோம். அந்த சிந்தனையில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை" எனக் குறிப்பிட்டு ராணி முகர்ஜி உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.