உலகம் முழுக்க கரோனா அச்சத்தால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த மருத்துவர் சைமன் கரோனாவால் இறந்துவிட்டார். அவருடைய உடலை புதைக்கவிடாமல் ஒருசிலர் போலீஸாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் போலீஸாரின் உதவியுடன் அவரது உடல் புதைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு பலர் தங்களின் கண்டனக் குரல்களை எழுப்பினார்கள். உடலை புதைக்கவிடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘வி லவ் டாக்டர்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு ஹேஸ்டேக் பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ வணக்கம், நான் சிவகார்த்திகேயன் பேசுகிறேன். இந்த லுக்கில் என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. பலர் இதுபோன்ற லுக்கில்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாம் சரியாக இந்த விதிமுறைகளை எல்லாம் பின்பற்றி விட்டோம் என்றால் இன்னும் சிறிது காலம்தான் இதெல்லாம். அதனால் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். நமக்காக வெளியே உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து பேருக்கும் என்னுடைய நன்றி. அதேபோல குறிப்பாக மருத்துவர்களுக்கும் நன்றி. அவர்களுடைய உயிர், வாழ்க்கை, குடும்பம் எதை பற்றியும் யோசிக்காமல் மக்களுக்காக சேவை செய்யும் மனிதக் கடவுள்கள் மருத்துவர்கள். அவர்களுக்கு பெரிய நன்றி மற்றும் சல்யூட். அவர்கள் மேல் நமக்கு அன்பும், மரியாதையும் அதிகமாகவே இருக்கிறது என்பதை சொல்வதற்குதான் இந்த வீடியோ. ஏனென்றால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். அதை பார்த்தபோது நமக்கும் கஷ்டமாக இருந்தது. அவர்களுடைய செயல்கள் மூலம், நமக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். அதேபோல அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை காட்ட, இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி பதிவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.