ADVERTISEMENT

‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்!

03:28 PM Aug 06, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். தொடக்கத்திலிருந்தே பல தடைகளை கடந்து ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங், கரோனா அச்சுறுத்தலால் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருப்பதால் இந்த படம் ட்ராப் ஆகி விட்டதாக வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், “மாநாடு படம் ட்ராப் ஆகவில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

ADVERTISEMENT

பொதுவாக சிம்புவின் இதற்கு முன்பான நடத்தையே இதற்கெல்லாம் காரணம். அவர் சினிமா ஷூட்டிங்கிற்கே வர மாட்டார், காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்றால் மாலை மூன்று மணிக்குதான் ஷூட்டிங்கிற்கே வருவார்' போன்றவை பொதுவாக சிம்பு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். ஆனால், இதற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த சிம்பு சொன்னபடி நடித்து முடித்தது, பலருக்கும் ஆச்சரியம். அதன்பின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் நடித்து ரிலீஸ் செய்தார். இதனிடையேதான் மாநாடு மற்றும் மஃப்டி தமிழ் ரீமேக் இரண்டிலும் சிம்பு நடித்து வருகிறார். ஆனால், ரிசல்ட் என்ன என்பது கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து, சினிமா ஷூட்டிங் முடிந்த பிறகுதான் தெரியும்.

தமிழ் சினிமாவில் இருக்கும் வியாபார சூழ்நிலையில் யார் கதாநாயகனாக இருந்தாலும் சில திரைப்படங்கள் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, அல்லது மிகத் தாமதமாக வெளிவர வாய்ப்பிருக்கிறது. இது அனைத்து நடிகர்களுக்குமே நிகழக்கூடிய, நிகழ்ந்திருக்கும் ஒன்றுதான். ஆனால், சிம்பு விஷயத்தில் இது சற்றே அதிகம். அவர் நடிப்பதாக அறிவித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் குறித்தும், அவர் நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் குறித்தும் பார்ப்போம்.

'வல்லவன்' வெளியாகி ஓரளவு வெற்றி பெற, சிம்பு அடுத்து 'கெட்டவன்' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் பாடல்கள் கூட இணையத்தில் லீக்காகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பிரபல தொகுப்பாளராகவும் மாடலாகவும் இருந்த லேகா சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு லேகா சிம்புவை குறை சொல்லி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

'நியூ' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா சிம்புவையும் அசினையும் வைத்தும் 'ஏசி' என்றொரு படத்தை எடுக்க இருந்தார். ஆனால், போட்டோஷூட்டுடன் படம் ட்ராப் ஆனது. 'வாலிபன்', நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு சிம்பு இயக்கி நடிப்பதாக இருந்த படம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு பாடலும் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தப் படமும் டேக்-ஆஃப் ஆகவில்லை.

'வேட்டை' படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்புவைத்தான் தேர்வு செய்தார் லிங்குசாமி ஆனால், படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு வராமல் காலதாமதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் பிரச்சனைவர சிம்பு ‘வேட்டை மன்னன்’ என்னும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங்கை தொடங்கினார். 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் முதல் படம் 'வேட்டை மன்னன்'. இந்தப் படத்தின் முதல் பாதி ஷூட்டிங் மட்டும் முடிவடைந்து இணையத்தில் டீஸரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், படம் ட்ராப் ஆகிவிட்டது.

கான்... செல்வராகவன் பல தடைகளுக்கு பின்னர் முதன் முதலில் சிம்புவை வைத்து படம் எடுப்பதாக அறிவித்து, போஸ்டரும் வெளியானது. ஆனால், காரணம் தெரியாமலேயே இந்த படமும் ட்ராப்பானது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான படம் 'கோ'. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக கமிட்டாகியிருந்தவர் சிம்புதான். நாயகியை மாற்ற வேண்டும் என்று சொல்லியதால் இயக்குனர் நாயகனை மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டது. தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன், முதலில் சிம்புவை வைத்துதான் 'வடசென்னை' இயக்குவதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அந்தப் படத்தில் தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிபெற்றது.

இதுமட்டுமல்லாமல், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி தோல்வியடைந்த சமயத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்து படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வராதது குறித்தும் தனது வீட்டின் பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாகவும் சொன்ன பிறகு சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஹாலிவுட் தரத்தில் ஒரு படம்' எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் பலர் சிலிர்த்துப்போய் சில்லரையை விட்டு எறிந்து கொண்டாடினார்கள். ஆனால், அந்த படத்தை பற்றி அதற்கு பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதேபோன்றுதான் முதலில் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டார் என்றபோது மகாமாநாடு என்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க சிம்பு இயக்கத்தில் சுமார் ரூ. 125 கோடி பட்ஜெட்டில், ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறது என்றெல்லாம் அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலிருந்து இன்றுவரை இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT