நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று நடவிருக்கிறேன். சின்ன கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியைச் செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு மரக்கன்று நட வேண்டுகோள் விடுத்தார்.
சிம்புவின் இந்தப் பதிவையடுத்து, அவரது ரசிகர்கள் பலரும் மரக்கன்று நட்டு அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள், இந்த மரக்கன்று நடும் முன்னெடுப்பை மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கும் வகையில் ஒரு நிகழ்வை ஒருங்கிணைக்கும்படி சிம்புவிற்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
நடிகர் விவேக்கின் மரணச் செய்தி வெளியானதிலிருந்தே, அவரது ஆசையான ஒரு கோடி மரம் நடவேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கோடு பல தன்னார்வ அமைப்புகளும் இத்தகைய மரம் நாடும் முன்னெடுப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.