மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில் வரவேற்பை பெற்று வருகிறது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் படக்குழுவையும் சிவகார்த்திகேயனையும் பாராட்டினார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாவீரன் அற்புதமாக எழுதப்பட்ட மடோன் அஸ்வினின் புத்திசாலித்தனம். அவர் திரைத்துறையில் நிலைத்து நிற்பார் என்பதை காட்டுகிறது. கிளாசி மாஸ் என்டர்டெய்னர் மற்றும் திரைக்கதைக்குள் அற்புதமான நகைச்சுவை உணர்வு. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பை வழங்கியுள்ளார்.
அதிதி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார். சரிதா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதை உருவாக்கிய விதம் குறிப்பிடும்படியான ஒன்று. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். நிச்சயமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியான ஒரு புது அனுபவம் கிடைத்தது" என குறிப்பிட்டுள்ளார்.