ஷாருக்கானின் 'பதான்' படம் ஒரு வழியாக காவி சர்ச்சையில் இருந்து கடந்து வந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்கள் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 634 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தது படக்குழு. இந்த நிலையில் வங்கதேசத்தில் உள்ள ஷாருக்கான் ரசிகர் ஒருவர் இந்தியாவுக்கு வந்து படம் பார்த்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் வங்கதேசத்தில் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக வெளியாகவில்லை. பதான் படம் வெளியாகாததால் அங்குள்ள ஷாருக்கான் ரசிகர் ஒருவர் கடுப்பாகி 'விடுடா வண்டிய இந்தியாவுக்கு...' என்ற பாணியில் அங்கிருந்து இந்தியாவுக்கு தனது குடும்பத்துடன் வந்து பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அந்த திரையரங்க உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு நெகிழ்ந்துள்ளார்.