Ananya Panday

மும்பையிலிருந்து கோவா நோக்கிச் சென்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை விருந்து நடந்த விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்திய போலீசார், விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு நடிகை அனன்யா பாண்டேவிற்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்திற்கு தன்னுடைய தந்தையுடன் வந்து நடிகை அனன்யா பாண்டே நேரில் ஆஜரானார்.

Advertisment

ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சேட்டை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், அந்த வாட்ஸ்அப் சேட்டில் ஆர்யன் கானுடன் போதைப்பொருள் விவகாரத்தில் அனன்யா பாண்டேவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், 2018 முதல் 2019வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் விநியோகம் செய்பவர்களின் தொலைபேசி எண்களை மூன்று முறை ஆர்யன் கானுக்கு அவர் கொடுத்து உதவியதும் தெரியவந்துள்ளது. அந்த வாட்ஸ்அப் சேட்டில் போதைப்பொருள் விநியோகம் செய்பவர்கள் யாரவது தெரியுமா என ஆர்யன் கான் கேட்ட கேள்விக்கு, நடிகை அனன்யா பாண்டே தெரியும் எனப் பதிலளித்துள்ளார். இது குறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்புகையில், தான் கிண்டலுக்காக அப்பதிலைக் கூறியதாக அனன்யா பாண்டே பதிலளித்ததாக என்.சி.பி. வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறதா என அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, தான் எந்த விதமான போதைப்பொருளையும் பயன்படுத்தியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அனன்யா பாண்டேவின் லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Advertisment

22 வயதே நிரம்பிய இளம் நடிகையான அனன்யா பாண்டேவிற்கு, இந்தப் போதைப்பொருள் விவகாரம் பெரிய சிக்கலைக் கொடுத்துள்ளது.