ADVERTISEMENT

ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த சஞ்சய் தத்!

04:12 PM Oct 21, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆக்ஸ்ட் 8ஆம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.

இதன்பின் சஞ்சய் தத் சிகிச்சை பெற்று வரும்போது உடல்நிலை மெலிந்து காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது. மிகவும் மோசமாக இருப்பதுபோல இருந்த சஞ்சய் தத், திடீரென 'கே.ஜி.எஃப்' படத்திற்காக ஸ்டைல் செய்துகொள்ள பிரபல ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹகீம் சலூனுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியளித்தார். அப்போது பேசியவர் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில வாரங்களாக எனக்கும், என் குடும்பத்தினருக்கும் கடினமான நேரமாக அமைந்தது. பலசாலியான வீரனுக்குதான் கடுமையான சவால்களை அளிப்பார்கள் என்று சிலர் சொல்வார்கள். என்னுடைய மகனின் பிறந்தநாளான இன்று, கடுமையான சவாலில் வென்று என்னுடைய நலமுடன் மீண்டிருப்பதை அவருக்கு பரிசாக வழங்குகிறேன்.

உங்கள் அனைவருடைய நம்பிக்கையும் ஆதரவும் பெறவில்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் அனைவருடைய அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் என்னுடைய நன்றிகள். குறிப்பாக எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவக்குழு, மருத்துவர்களுக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT