ADVERTISEMENT

அவர்களுக்கு உற்சாகம் தரவே விஜய்யின் இயக்கம் கட்சியாகப் பதிவு - எஸ்.ஏ.சந்திரசேகர்!

04:29 PM Nov 06, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் விஜய். இவர், அரசியல் கட்சித் தொடங்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. 'அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யக் கோரிய விண்ணப்பமும் வெளியானது. ஆனால், இந்தத் தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, விஜய்யின் செய்தித் தொடர்பாளர், விஜய் கட்சித் தொடங்கும் செய்தியை மறுத்தார். இந்தநிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யின் பெயரில் அரசியல் கட்சித் தொடங்குவது தன்னுடைய முயற்சி எனவும், இதற்கும் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யின் பெயரில் கட்சி ஆரம்பிப்பது தன்னுடைய முயற்சி எனக் கூறிய சிறிது நேரத்திலேயே, விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தனது தந்தை கட்சி ஆரம்பித்ததை ஊடகங்களின் வாயிலாக அறிந்ததாகவும், தனக்கும், தன் தந்தை ஆரம்பித்த இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் கூறியிருந்தார் விஜய். மேலும், "எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக, தங்களை அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம்" என்றும் "எனது பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்தியத் தளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தனது பெயரில், தனது தந்தை கட்சி ஆரம்பித்ததை ஊடகங்களின் வாயிலாக தெரிந்துகொண்டதாக விஜய் கூறியது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமூகவலைதளங்களில், விஜய்க்கும், அவரது தந்தை சந்திரசேகருக்கும் இடையே சுமுக உறவு இல்லை எனச் செய்திகள் வலம் வரத் தொடங்கின.


இந்தநிலையில், தற்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், தனக்கும் விஜய்க்கும் சுமுகமான உறவு இருப்பதாகவும், மற்றவர்களின் கற்பனைக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், அவர் "விஜய்யின் பெயரிலான இயக்கம், 1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக தொடங்கப்பட்டு, நற்பணி மன்றமாக மாறி, இப்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அந்த மக்கள் இயக்கத்தில் உள்ள தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், அங்கீகாரத்தையும் தரவே, இயக்கத்தைக் கட்சியாகப் பதிவு செய்தேன்" என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT