தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தொடக்கத்தில் தன் படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்த இவர். தற்போது பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் 'நான் கடவுள் இல்லை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகரும் தே.மு.தி.க.வின் தலைவருமான விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜயகாந்த் தனது திருமண நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து "என் உயிரை நான் சந்தித்த போது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் முதன்முதலில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் நடித்ததை அடுத்து, தொடர்ந்து அவருக்கு தன் படங்களின் வாய்ப்பை அளித்தார். அவர் கூட்டணியில் வெளியான 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதியின் மறுபக்கம்', 'செந்தூரப்பாண்டி' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.