இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "நாட்டில் கரோனா தொற்று குறைந்து திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டால் 'ஆர்.ஆர்.ஆர்' படம் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகும், இல்லையெனில் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.