தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "ராம்சரண் 15' படத்தின் தேவைக்கு திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள். அவ்வாறு பதிவிடும் பதிவுகளுக்கு எதிராக எங்கள் குழு நடவடிக்கை எடுக்கும். அதனால் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.