ADVERTISEMENT

விஷால் - ஆர்.பி.சௌத்ரி மோதல்: நடந்தது என்ன.. விளக்கமளிக்கும் ஆர்.பி.சௌத்ரி!

05:57 PM Jun 18, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி, பைனான்சியராகவும் செயல்பட்டுவருகிறார். பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு பைனான்ஸ் செய்துவரும் இவரிடம், விஷால் இரும்புத்திரை படத்திற்காக பைனான்ஸ் வாங்கியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து விஷால் கடனை முழுமையாக செலுத்திவிட்டு பிறகும் கடன் வாங்கையில் விஷால் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்களை ஆர்.பி.சௌத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்ட பிறகும், தான் கொடுத்த ஆவணங்கள் எதையும் ஆர்.பி.சௌத்ரி தரப்பு திருப்பி தரவில்லை என்று கூறி நடிகர் விஷால் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்.பி.சௌத்ரி முதல்முறையாக இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர்‌ விஷால்‌ 'இரும்புத்திரை' படம்‌ தயாரிக்க என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியிருந்தார்‌. அந்தப் படத்திற்கு நானும்‌ விநியோகஸ்தர்‌ திருப்பூர்‌ சுப்பிரமணியமும்‌ சேர்ந்து பணம்‌ கொடுத்தோம்‌. 'இரும்புத்திரை' படம்‌ வெளியீட்டில்‌ விஷால்‌ எனக்குக் கொடுக்கவேண்டிய பணத்தில்‌ பாதித் தொகையைக் கொடுத்துவிட்டு மீதித் தொகையை சில தவணைகளில்‌ கொடுப்பதாகக் கூறினார்‌.

நானும்‌ ஒரு தயாரிப்பாளர்‌ என்ற முறையில்‌ படம்‌ வெளியாக வேண்டுமென்று ஒப்புக்கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன்‌. இறுதியாக இருந்த பாக்கித் தொகையை அவர்‌ தயாரித்து நடிக்கும் 'சக்ரா' திரைப்படத்தின்‌ வெளியீட்டில்‌ தருவதாகக் கூறியிருந்தார்‌. 'சக்ரா' படத்தின்‌ வெளியீட்டின்‌பொழுது எனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ 'சக்ரா' படத்தின்‌ கோவை ஏரியா விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாகவும்‌ அதில்‌ வரும்‌ ஓவர்ஃப்ளோ பணத்தின்‌ மூலம்‌ எனக்கு வரவேண்டிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்‌. நானும்‌ அதற்கு ஒப்புக்கொண்டேன்‌. அதன்‌ அடிப்படையில்‌ நானும்‌ விஷாலும்‌ 20-02-2021 அன்று விஷாலின்‌ வழக்கறிஞர்‌ மூலமாக 'இரும்புத்திரை', 'சக்ரா' ஆகிய இரு திரைப்படங்களுக்கு மட்டுமான வரவு செலவுக் கணக்கு முடிந்துவிட்டதாக ஓர்‌ ஒப்பந்தம்‌ செய்துகொண்டோம்‌. 'இரும்புத்திரை' பைனான்ஸுக்காக (Negative Rights) எனது நிறுவனத்தின்‌ பெயரிலும்‌ அத்துடன்‌ சில உறுதிமொழிப் பத்திரங்களையும்‌ (Stamp Paper, Green Sheet, Pronote, Cheques, Letterhead) கொடுத்திருந்தார்‌. (Negative Rights) எனது நிறுவனத்தின்‌ பெயரிலிருந்த காரணத்தால்‌ திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ பணத்திற்காக விஷால்‌ கொடுத்த மேற்கண்ட பத்திரங்களை எங்கள்‌ இருவருக்கும்‌ பொதுவான 'ரெட்டை ஜடை வயசு', 'ஆயுதபூஜை' படத்தின்‌ இயக்குநர்‌ சிவக்குமாரிடம் கொடுத்து வைத்திருந்தேன்‌.

இந்த நிலையில்‌ திடீரென சிவக்குமார்‌ மாரடைப்பால்‌ மரணம்‌ அடைந்துவிட்டார்‌. அவர்‌ திருமணமாகாதவர்‌ என்பதால்‌ தனி நபராக அடுக்குமாடிக் குடியிருப்பில்‌ வாழ்ந்து வந்தார்‌. ஆகவே, அவர்‌ இறந்தது இரண்டு நாட்களுக்குப் பின்புதான்‌ மற்றவர்களுக்கே தெரியவந்தது. அதன்பின்‌ அந்தப் பத்திரங்களை எங்கு வைத்தார்‌ என்று தெரியவில்லை. எப்படியும்‌ கிடைத்துவிடும்‌ என்ற நம்பிக்கையில்‌ அவருக்குத் தெரிந்த நபர்களிடம்‌ விசாரித்தும்‌ இன்றுவரை கிடைக்கவில்லை. அதன்பின்‌ கரோனா காலம்‌ தொடங்கிவிட்டது. இந்நேரத்தில்‌ எனக்கும்‌ விஷாலுக்கும்‌ இடையில்‌ பணம்‌ வாங்கிக் கொடுக்கும்‌ லக்‌ஷ்மன்‌ என்பவர்‌ மூலம்‌ அந்தப் பத்திரம்‌ கிடைக்காமல்‌ போன விஷயத்தை விஷாலுக்குத் தெரிவிக்குமாறு கூறினேன்‌. இந்த நிலையில்‌ விஷால்‌ 07-06-2021ல்‌ காவல்துறையில்‌ என்னிடம்‌ கொடுத்த உறுதிமொழிப் பத்திரங்கள்‌ திரும்பக் கிடைக்கவில்லை என்றும்‌, அதை வேறு யாரிடமும்‌ இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்துத் தாருங்கள்‌ என்றும்‌ புகார்‌ ஒன்றைக் கொடுத்துள்ளார்‌. அவர்‌ கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதென்றே நானும்‌ கருதுகிறேன்‌. ஏனெனில்‌ வேறு யாரின்‌ கையில்‌ இருக்குமோ என்ற பயத்தில்‌ அதைக் கொடுத்துள்ளார்‌.

ஆனால்‌, அவர்‌ என்னிடமும்‌ கலந்து பேசி நாங்கள்‌ இருவரும்‌ சேர்ந்து புகார்‌ அளித்திருந்தால்‌ தெளிவாக இருந்திருக்கும்‌. ஏனெனில்‌ 2020 ஜனவரியில்‌ அவர்‌ தயாரித்து இயக்கும்‌ 'துப்பறிவாளன்‌2' திரைப்படத்தின்‌ சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையின்‌ மீது என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியுள்ளார்‌. இந்த பைனான்ஸ்‌ வாங்கிய தேதியில்‌ இருந்து இன்றுவரை வட்டியும்‌ அசலும்‌ நிலுவையில்‌ உள்ளன. இந்த நிலையில்‌ ‘இரும்புத்திரை’ படத்தின்‌ உறுதிமொழிப் பத்திரங்களை வைத்து நான்‌ மோசடி செய்ய முயல்வதாக விஷால்‌ புகார்‌ செய்துள்ளார்‌ என்ற செய்திகள்‌ ஊடகங்களில்‌ மூலம்‌ வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

நான்கு மொழிகள்‌, 92 திரைப்படங்கள்‌, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்‌ இப்படி ஒரு அவதூறு புகாரை நான்‌ சந்திப்பது இதுவே முதல்‌ முறையாகும்‌. இதுவரை என்னுடைய பணம்‌ பிறரிடம்‌ பாக்கி வரவேண்டியதே தவிர மற்ற எவருடைய பணமும்‌ என்னிடம்‌ இல்லை என்பது தென்னிந்திய திரை உலகத்திற்கே தெரியும்‌. என்னுடைய இந்த அறிக்கையின்‌ தாமதத்திற்குக் காரணம்‌ இந்தச் சம்பவம்‌ நடக்கும்‌ சமயத்தில்‌ நான்‌ வெளியூரில்‌ இருந்த காரணத்தினால்‌ சென்னைக்குத் திரும்பிய பிறகு என்னுடைய தன்னிலை விளக்கத்தை தங்களுடன்‌ பகிர்ந்துகொள்கிறேன்‌" எனக் கூறியுள்ளார்.

மேலும், அந்த ஆவணங்கள் சிவகுமாரைச் சார்ந்த நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ இருந்தால்‌ அதை என்னிடமோ, விஷாலிடமோ, அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்கவும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஆர்.பி.சௌத்ரி, அதைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட நினைத்தால் அவர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT