ADVERTISEMENT

“வாழ்க்கை முழுதும் அந்த கவலை இருக்கும்” - விஜயகாந்த் குறித்து ரம்பா உருக்கம்

04:54 PM Feb 05, 2024 | kavidhasan@nak…

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் நடிகை ரம்பா தனது கணவருடன், விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது இல்லத்திற்கு சென்று உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விஜயகாந்தின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரம்பா, “கேப்டன் இறந்தபோது என்னால் வர முடியவில்லை. இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போய்விடுவார் என நினைக்கவில்லை. அவருடன் நடித்தபோது முதலில் ஒரு ஹீரோவாகத்தான் தெரியும். ரொம்ப நல்ல மனிதர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நல்ல அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். என் பெற்றோருக்கும் நல்ல அட்வைஸ் கொடுத்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் சங்க நிகழ்ச்சியில் எனக்கு அடிப்பட்டபோது, நல்லா பார்த்துக்கிட்டார். என் வீடு அவருக்கு பக்கத்தில் இருப்பதால் அடிக்கடி வந்து விசாரிப்பார். அவர் உயிரோடு இருக்கும் போது, ஒரு முறை கூட வந்து மீட் பண்ணவில்லை. அது ஒரு குறையாவே இருக்குது. ரொம்பவும் கஷ்டமாயிருக்கு. வாழ்க்கை முழுதும் அந்த கவலை இருக்கும். ஆனால் இப்போது அவரின் நினைவிடத்திற்கு வந்தது எனக்கு சந்தோஷம். அனைவரின் மனதிலும் விஜயகாந்த் கண்டிப்பாக இருப்பார்” என உருக்கமாகப் பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT