ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கோல்டன் குளோப் விருது நிகழ்வில் சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக விருதைப் பெற்றது. அந்த விழாவின்போது பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்டவர்களை ராஜமௌலி சந்தித்து கலந்துரையாடும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாயின.
உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த இயக்குநராக இருக்கும் ராஜமௌலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சர்ச்சைக்கு பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா ராஜமௌலி குறித்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். ராஜமௌலி ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாதா சாஹப் பால்கே முதல் இன்று வரை இந்திய சினிமா வரலாற்றில் ராஜமௌலி உட்பட யாரும் இந்த தருணத்தை ஒரு இந்திய இயக்குநர் கடந்து செல்வார் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "ராஜமௌலி, தயவு செய்து உங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். ஏனென்றால் இந்தியாவில் உள்ள சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் உங்கள் மீது பொறாமையில் உள்ளனர். அவர்கள் உங்களை கொலை செய்ய ஒரு குழுவாக திரண்டுள்ளனர். அந்த குழுவில் நானும் ஒரு அங்கம் தான். இந்த ரகசியத்தை நான் இப்போது வெளியில் சொல்கிறேன்" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.