ADVERTISEMENT

'ஜெய் பீம்' இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் ரஜினி?

02:34 PM Jan 09, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்தக் கதாபாத்திரத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் நடிப்பது தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீதம் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார் ரஜினி. 'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து அடுத்து எந்த இயக்குநருடன் இணைவார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் உலா வருகிறது.

இதையடுத்து 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினியிடம் ஞானவேல் கதை கூறியதாகவும், அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் த.செ. ஞானவேல் - ரஜினிகாந்த் கூட்டணி உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.செ. ஞானவேல், தனது முதல் இந்தி படமான 'தோசை கிங்' படத்தை இயக்குகிறார். இப்படம் பிரபல உணவு நிறுவனத்தின் நிறுவனர் ராஜகோபால் மீது அதிர்ச்சியூட்டும் குற்றங்களைச் சுமத்தி 18 வருட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு தண்டனை பெற்றுத் தந்த ஜீவஜோதி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. ரஜினியுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 'தோசை கிங்' படத்தை முடித்துவிட்டு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விரைவில் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி இரண்டு படங்கள் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் அதில் ஒரு படமாக 'லால் சலாம்' படம் உருவாகிறது. இன்னொரு படம் 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு இப்போது வாய்ப்பில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் இன்னொரு படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT