ADVERTISEMENT

"ரொம்ப நாட்களுக்குப் பிறகு கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்" - ரஜினிகாந்த் வாழ்த்து

02:47 PM Apr 11, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சசிகுமார் நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. பெரிதளவு ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் பலரது கவனத்தை பெற்றது. மனிதம் மற்றும் மதநல்லிணக்கத்தை பற்றி பேசியிருந்த இப்படம் திரைப்பட விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு தங்க செயின் பரிசாக வழங்கினார். இப்படத்தை பார்த்து வாழ்த்து அறிக்கை வெளியிட்ட சீமான், "மனிதம் போற்றும் அயோத்தி. ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய படம்" என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது. சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து மாலை அணிவித்து பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அயோத்தி…நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT