சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் உள்ளிட்ட ஹீரோக்கள் நடித்து வருவதால் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து லைகா நிறுவனத் தயாரிப்பில் ரஜினி இரண்டு படங்கள் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், அதில் ஒரு படமாக 'லால் சலாம்' படம் உருவாகிறது. இப்படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில், லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இன்னொரு படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அதனை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ரஜினியின் 170வது படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்குவார் எனத் தகவல் வெளியான நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினிகாந்தின் 170வது படத்தின் பணிகள் இனிதே ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024ஆம் ஆண்டுக்குள் திரையில் வெளியாகும். ரஜினியின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.