தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகப் பிரபலமடைந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பின்பு இயக்குநராக அவதாரம் எடுத்து 'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தும் இருந்தார். இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்', 'அதிகாரம்' மற்றும் 'சந்திரமுகி 2' படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே 'லாரன்ஸ் அறக்கட்டளை' என்ற அறக்கட்டளையும் நடத்தி அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ராகவா லாரன்ஸ், ரஜினியைச் சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது பிறந்தநாளில் தலைவர் மற்றும் குருவிடம் ஆசீர்வாதம் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நான் ஏதாவது சேவை செய்ய முடிவு செய்து வருகிறேன். அந்த வகையில் இந்த ஆண்டு நான் பசியின் மதிப்பை அறிந்து அன்னதானம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களுக்கு நேரில் சென்று உணவு விநியோகம் செய்யவுள்ளேன். உங்களின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.