ADVERTISEMENT

படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ராதிகா!

01:54 PM Aug 11, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சாமி 2'. அப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து 'அருவா' திரைப்படத்தை ஹரி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர், கதை தொடர்பான விவகாரத்தில் ஹரிக்கும், சூர்யாவிற்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படம் கைவிடப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இயக்குநர் ஹரி, தன்னுடைய உறவினரும் நடிகருமான அருண் விஜய்யை நாயகனாக வைத்து படம் இயக்கும் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'அருண்விஜய் 33' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக இயக்குநர் ஹரி கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, சில நாட்கள் கழித்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையே, கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், 'அருண்விஜய் 33' படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய்யுடன் யோகிபாபு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. நடிகை ராதிகா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா சினிமாவில் நுழைந்து 43 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் ராதிகாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT