ADVERTISEMENT

“மூன்று மாதங்கள் மொத்த குழுவும் அங்கேயே சிக்கினோம்” - பிருத்விராஜ்

06:25 PM Mar 20, 2024 | kavidhasan@nak…

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை ஆடுஜீவிதம் என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

நடிகர் பிருத்விராஜ் பேசியதாவது, "இந்தப் படம் கிட்டத்தட்ட 16 வருடப் பயணம். 2008ல் இயக்குநர் பிளெஸ்ஸி என்னிடம் வந்து, 'நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்' எனக் கூறினார். மோகன்லால் சார், மம்முட்டி சார் என மலையாளத்தில் பெரிய ஸ்டார்கள் எல்லோரும் பிளெஸ்ஸியுடன் ஒரு படமாவது செய்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியான முன்னணி இயக்குநர்தான் பிளெஸ்ஸி. அவர் ஒரு படத்திற்காக 16 வருடம் செலவிட்டது என்பது அவருடைய கமிட்மெண்ட்டை காட்டுகிறது. 2009ல் இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்ல பத்து வருடங்கள் ஆனது. ஏனெனில், மலையாள சினிமாவில் அதற்கான கேமரா, இன்னும் சில விஷயங்கள் அப்போது சாத்தியமே இல்லாமல் இருந்தது. படம் ஆரம்பிக்கும்போது யார் இசை என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. ரஹ்மான் சார் மற்றும் ஹேன்ஸ் ஸிம்மர் இருவருடைய பெயர்கள் தான் நாங்கள் நினைத்திருந்தோம். ஹேன்ஸ் ஸிம்மர் அணியில் இருந்து எங்களுக்கு ரிப்ளை வந்தது. ஆனால், அந்த சமயத்தில் ரஹ்மான் சாரை எப்படி தொடர்பு கொள்வது என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. ரஹ்மான் சார் இசை மக்களுக்கு இன்னும் நெருக்கமானதாக இருக்கும் என நம்பினோம். பின்பு, அவரும் நாங்கள் பெரிதாக எதையோ செய்யப் போகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு சம்மதம் சொன்னார். அவர் பெயர் எங்கள் படத்துடன் சேர்ந்ததும் மக்களிடம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. அவருக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

ADVERTISEMENT

மூன்று, நான்கு வருடங்கள் பாலைவனத்தில் சிக்கிய ஒருவரின் வாழ்க்கையை இந்த கதை கூறுகிறது. அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஆரம்பத்தில் நன்றாக எடை கூடினேன். கேரளாவில் படப்பிடிப்பு முடித்த பின்பு ஏழெட்டு மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்கள். எனக்கு உடல் எடை குறைய பிளெஸ்ஸி அவகாசம் கொடுத்தார். பின்பு 2020ல் ஜோர்தான் சென்று படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்சம் நாட்களிலேயே, கொரோனா வந்ததால் மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் மொத்த குழுவும் அங்கேயே சிக்கினோம். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா, இந்த படம் இனி நடக்குமா என எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு முறையான அனுமதி பெற்று நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அல்ஜீரியா, சஹாரா பாலைவனத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்தினோம். பின்பு ஜோர்தான் சென்று அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாதவற்றை ஷூட் செய்தோம். பின்பு, கேரளா வந்தோம். 2022இல் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஒன்றரை வருடம் ஆனது. இந்தப் படத்திற்கு நான் ஓகே சொன்ன 2008 சமயத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை, தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் என்று எந்த முகமும் அப்போது எனக்கு இல்லை. இத்தனை வருட பயணத்தில் எனக்கு இன்னொரு முகமாக இந்தப் படம் இருக்கிறது. சினிமாவுக்கு குறிப்பாக மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல நிலைமை. இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி. படத்தை தமிழகத்தில் டிஸ்ட்ரிபியூட் செய்ய ஒத்துக்கொண்ட உதயநிதி சாருக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் நன்றி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு" என்றார்.

இசையமைப்பாளர் ரஹ்மான், "இந்தப் படம் ஒத்துக்கொள்ளும் பொழுது சீக்கிரம் முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தில் வேற லெவல் நடிகராக பிருத்விராஜ் உள்ளார். பிளெஸ்ஸி சிறப்பான இயக்கத்தை கொடுத்துள்ளார். சிலர் என்னிடம் கேட்டார்கள். 'இந்த படம் மரியான் போல இருக்குமா என்று!'. மரியான் ஃபிக்‌ஷன். ஆனால் இது உண்மையான கதை. இந்த படத்தின் கதையான 'ஆடுஜீவிதம்' புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. அப்படி என்றால் அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அர்த்தம். அது என்னவென்று நீங்கள் படம் பார்த்து கண்டுபிடித்து சொல்லுங்கள்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT