ADVERTISEMENT

“அது உங்களுடைய உச்சம் அல்ல...”- மறைந்த சச்சி குறித்து ப்ரித்விராஜ்!

10:46 AM Jun 20, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

மலையாள சினிமாவின் பிரபல கதையாசிரியரும் இயக்குனருமான சச்சி உடல்நல குறைவால் 18ஆம் தேதி இரவு காலமானார். அவருடைய மறைவிற்கு மலையாள சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சச்சியின் நெருங்கிய நண்பரான ப்ரித்விராஜ் சச்சியின் மறைவு குறித்து நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், "சச்சி.. நிறைய மெசேஜ்கள் வந்திருந்தன. சில விசித்திர அழைப்புகளும் வந்தன. நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்கின்றனர். எனக்கு ஆறுதல் கூறுகின்றனர். என்னையும் உங்களையும் தெரிந்த அனைவருக்கும் நம்மையும் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் என்னிடம் கூறிய ஒரு விஷயத்தை நான் அமைதியாக மறுக்கிறேன். அது நீங்கள் 'உச்சத்துக்குச் சென்று விட்டீர்கள்' என்ற வார்த்தை.

உங்களுடைய கனவுகளையும், யோசனைகளையும் தெரிந்தவர்களில் ஒருவனாக 'அய்யப்பனும் கோஷியும்' உங்கள் உச்சம் அல்ல என்பதை நான் அறிவேன். இதுதான் நீங்கள் விரும்பிய ஒரு ஆரம்பம். நீங்கள் விஸ்வரூபம் எடுக்கும் இந்தக் கட்டத்தை அடைய உங்கள் ஒட்டுமொத்த படங்களும் ஒரு பயணமாக அமைந்தது. எனக்குத் தெரியும். சொல்லப்படாத கதைகள் ஏராளம் உண்டு. பல நிறைவேறாத கனவுகள் உண்டு. பல இரவு நேர வாட்ஸப் வாய்ஸ் மெசேஜ் கதை சொல்லலும் உண்டு. ஏராளமான தொலைபேசி அழைப்புகளும் உண்டு. வரப்போகும் வருடங்களுக்கான இந்த மிகப்பெரிய திட்டத்தை நீங்களும் நானும் உருவாக்கினோம். திடீரென நீங்கள் சென்றுவிட்டீர்கள்.

சினிமா குறித்த உங்கள் பார்வையையும், வரப்போகும் ஆண்டுகளுக்குத் தேவையான உங்கள் படங்களின் திட்டங்களை வேறு யாரிடமும் சொல்லியிருக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னிடம் கூறினீர்கள். ஆனால் நீங்கள் இருந்திருந்தால் அடுத்த 25 ஆண்டு மலையாள சினிமாவும் என்னுடைய எஞ்சியிருக்கும் சினிமா வாழ்க்கையும் வேறு மாதிரி அமையும் என்பதை நான் அறிவேன்.

ஆனால் சினிமாவை விட்டுவிடுவோம். நீங்கள் என்னோடு இருக்க அந்தக் கனவுகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். அந்த வாய்ஸ் மெசேஜ்கள் மீண்டும் கிடைப்பதற்காக. அடுத்த தொலைபேசி அழைப்புக்காக. நாம் இருவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று என்னிடம் சொல்வீர்கள். ஆம் நாம் ஒரே மாதிரியானவர்கள்தான். ஆனால் என்னை விட நீங்கள் மிகவும் வித்தியாசமாக உணர்பவர் என்று நான் இப்போது நம்புகிறேன்.

உங்களைத் தெரிந்திருப்பது ஒரு கவுரவம் சச்சி. என்னுடைய ஒரு பகுதி உங்களுடனே சென்றுவிட்டது. இப்போதிலிருந்து உங்களை நினைவில் கொள்வது என்னுடைய அந்தப் பகுதியையும் நினைவில் கொள்வது போலாகும். நன்றாக ஓய்வெடுங்கள் சகோதரா. நன்றாக ஓய்வெடுங்கள் ஜீனியஸ். உங்களை உலகின் மறுபக்கத்தில் சந்திக்கிறேன். சாண்டல்வுட் கதையின் க்ளைமேக்ஸை இன்னும் நீங்கள் என்னிடம் சொல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT