இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது, பழம் பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, வஹீதா ரஹ்மானும் அவருக்கு நன்றி தெரிவித்தார். இவர் தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இந்திய சினிமாவில் அவரது பயணம் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கருணை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக அவர் நமது சினிமா பாரம்பரியத்தின் சிறந்ததை வெளிப்படுத்தியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.