இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் என பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே அன்னபூரணி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டூடியோஸ், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது எனவும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் புண்படுத்தப்பட்டதற்கும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம் எனவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த நிலையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நீக்கபட்டதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஒரு ஆபத்தான முன்னுதாரணம் அமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டு தணிக்கை செய்வது குறித்து விமர்சித்துள்ளார்.