Skip to main content

நயன்தாரா வாழ்க்கை கற்றுத்தரும் 5 விஷயங்கள்! 

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

நயன்தாரா... தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், 'தலைவர்', 'தல' 'தளபதி' என நாயகர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள தமிழ் சினிமாவில் கடந்த ஆறு ஏழு ஆண்டுகள் முன்னணி நாயகியாகவும், பல நாயகர்களுக்கு இணையான வர்த்தகம் உடையவராகவும் விளங்குபவர்.

 

billa nayanthara



முன்னேறிய பலரையும் போல இவரது உயர்வும் எளிதாக நடந்ததல்ல என்றாலும் குறிப்பாக நயன்தாராவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள சில பாடங்கள் உண்டு. 
 

  • காதல், ப்ரேக்கப்... மீண்டும் காதல், ப்ரேக்கப்... என தொடர்ந்து உறவு சிக்கல்கள் மிகுந்த வாழ்வு நயன்தாராவினுடையது. முதலில் சிம்புவுடன் காதல், பின் பிரிவு, அதற்குப் பிறகு அவருடன் தனிமையிலிருந்த புகைப்படங்கள் பொது வெளியில் வெளியானபோது அது நயன்தாராவுக்கு கொடுத்த மன அழுத்தம் மிகப்பெரியது. பின்னர் பிரபுதேவாவுடனான காதலில் அவரது பெயரை பச்சைக்குத்திக் கொண்டார். அந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டு, பின்னர் கிசுகிசுக்கள், பின் விக்னேஷ் சிவனுடன் ரிலேஷன்ஷிப் என நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் வெளிச்சத்திலேயே இருந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு பிரிவு ஏற்பட்டபோதும் அதிலிருந்து அவர் மீண்டு வந்த விதமும் அது அவர் தொழிலை பாதித்தபோது, மீண்டும் அவர் தன் இடத்தைப் பிடித்த விதமும் கவனிக்கப்பட வேண்டியவை. ஏனெனில் ஏற்கனவே தமிழ் சினிமா வரலாற்றில் பல நாயகிகளின் கேரியரை முடித்துவைத்தது, ஒரு காதலோ அல்லது ஒரு காதல் பிரிவோவாகத்தான் இருக்கும்.

 

  • முதலில் ’ஐயா’ படத்தில் மிக இளம் பெண்ணாக அறிமுகமாகி, படத்தின் வெற்றியால் உடனே ’சந்திரமுகி’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெகு விரைவிலேயே காதலால் ஏற்பட்ட கவனக்குறைவு திரைப்பயணத்தை பாதித்தது. மேலும் உடல் பருமனானததால் கஜினி, ஈ போன்ற படங்களில் நயன்தாராவின் தோற்றம் கிண்டல் செய்யப்பட்டது. இப்படி கிட்டத்தட்ட அவரது திரைவாழ்வு முடிந்துவிட்டது என்று எண்ணப்பட்டபோது ’பில்லா’ படத்தில் யாருமே எதிர்பாராத வண்ணம் எடையைக் குறைத்து செம ஸ்லிம்மாகவும், ஸ்டைலிஷாகவும் ரீ-எண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் பொதுவாக ரீ-எண்ட்ரி என்பது எல்லாம் ஹீரோக்களுக்கான விஷயமாகவே இருந்தது. அந்த வகையில் நயன்தாரா ஒரு தனித்துவமான நாயகிதான். 

 

  • நயன்தாரா முதலில் சிம்பு நடித்த ’தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க முயற்சி செய்து நிராகரிக்கப்பட்டவர். பின்னர், தன் தொடர் முயற்சியால் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து, முன்னணி நாயகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்று ’லேடி சூப்பர்ஸ்டார்’ என்னும் உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். தமிழில் மட்டுமல்ல தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் நயன்தாரா. 
     
  • சிம்புவுடனான காதலும் பிரிவும்தான், நயன்தாரா வாழ்வில் மிகப்பரபரப்பாக எதிர்மறையாக பேசப்பட்ட பகுதி. சிம்புவும் அந்தப் பிரிவுக்குப் பிறகு பல மேடைகளில் நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல் காதல் தோல்வி பற்றியும் ‘என்னை விட்டுட்டு போய்ட்டா’ என்னும் தொனியிலும் தொடர்ந்து பேசி வந்தார். இத்தகைய அனுபவத்திற்குப் பிறகு, அவர் முன்னணி கதாநாயகியான பிறகும் மீண்டும் அதே சிம்புவுடன் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பெரும்பாலும் மறுத்திருப்பார். ஆனால், நயன்தாரா ’இது நம்ம ஆளு’ படத்தில் நடித்தார். இன்னும் சிலர் ’அவர்கள் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள்’, ’நயன்தாரா மீண்டும் மனம் மாறிவிடுவார்’ என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், நயன்தாராவோ தொழில்முறையாக மட்டுமே அந்த வாய்ப்பை அணுகினார். அந்தத் தெளிவும் ஆளுமையும் இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஒரு பெரிய ரிலேஷன்ஷிப் லெஸன் ஆகும். 
     
  • நயன்தாரா தேர்ந்தெடுக்கும் பாத்திரங்கள்... முதலில் அப்படி இப்படி இருந்தாலும் ’ராஜா ராணி’யில் தனது 2வது ரீ-எண்ட்ரியிலிருந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களிலேயே நடித்தார். இடையில் ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு வந்தபோது அதை மறுத்தவர், ’எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷ் நட்பிற்காக ஒரு பாடலில் ஆடினார். பிறகு, இனி பெரிய நடிகர்களின் படம் என்றாலும் சிறிய பாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடித்து ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் படங்களிலும் அவர்களுக்கு இணையான பாத்திரங்களில் நடித்தவர், மாயா, டோரா, அறம், கோகோ என தன்னை மையப்படுத்திய படங்களிலும் நடித்தார். இந்த ஒவ்வொரு படத்திலும் நயன்தாராவின் கதாபாத்திரம் மட்டுமல்லாது அவரது தோற்றம், உடை என ஒவ்வொன்றும் அவரது ஆளுமையை வெளிப்படுத்தின. 
     

நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்திற்கு, சென்னையில் முதல் நாள் அதிகாலை ஐந்து மணி காட்சி திரையிடப்பட்டது. இப்படி ஆண்கள் கோலோச்சும் ஒரு துறையில் அவர்களுக்கு இணையாக மிக வெற்றிகரமாக திகழ்கிறார். இப்படி திகழும் பலர் மிக இறுக்கமாகவும் கடினமானவர்களாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படியில்லாமல் நயன்தாரா தொட்டிருக்கும் இந்த உயரம் நாமெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடிய லைஃப் லெஸன்தான். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.