இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றனர். 'நெற்றிக்கண்', 'கூழாங்கல்', 'சாணிக்காயிதம்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது இயக்குநர் அஸ்வின்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'கனெக்ட்' படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து குஜராத்தி படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர் மனிஷ் சைனி இயக்கத்தில் மல்ஹர் தக்கார் மற்றும் மோனல் காஜர் இருவரும் நடிக்கும் 'சுப் யாத்ரா' படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிசெய்த விக்னேஷ் சிவன் முதல் முறையாக குஜராத்தி படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.