அதன் ஒரு பகுதியில், தனது திரை வாழ்க்கை குறித்து பேசிய மீனாட்சி சௌத்ரி, “சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்போம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சரியாக நமது வேலையை செய்தால், சரியான நேரம் வரும் பொழுது, அதற்காக ஏற்கெனவே நாம் தயாராகியிருப்போம். அது தான் தற்போது நடந்திருப்பதாக உணர்கிறேன். அதனால் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்திற்காக நான் ஏற்கெனவே தயாராகிவிட்டேன்.
திரைத்துறையில் நுழையும் போதே, எந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும், யாருடன் நடிக்க வேண்டும், என்பதில் தெளிவாக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக சரியான நபர்கள் என் வாழ்க்கையில் வந்தார்கள். அதுவும் எனது ஆரம்ப காலகட்டத்திலே வந்தார்கள். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். அந்த வகையில் ஆர். ஜே பாலாஜியும் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். சினிமா சம்மந்தமாக சில அறிவுரைகளும் வழங்கியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இவை அனைத்தும் விதி தான் என நினைக்கிறேன். உங்களுக்காக உருவாக்கப்பட்டவை, உங்களை ஒருபோதும் கடந்து செல்லாது. உருவாக்கப்படாதவை நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வந்து சேராது.
நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதனால் எந்த வாய்ப்பு எனக்கு வந்தாலும், அதில் 200 சதவீத உழைப்பை நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். மீனாட்சி சௌத்ரி தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (The Greatest of All Time) படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.