உலகப் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப், தற்போது மாஸ்டர் செஃப் இந்தியா என்ற பெயரில் இந்தியாவில் உருவாகவுள்ளது. பல்வேறு மொழிகளில் உருவாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் இந்தி மொழிக்கான உரிமையை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிக்கான உரிமைகளையும் சன் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது.
இந்த நிகழ்ச்சியைத் தமிழில் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் தொகுத்து வழங்கவுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பிடாடி என்ற இடத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இதற்கான படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.