பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.
கரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்படி, படத்தின் டீசரானது வரும் 8-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர் வெளியீட்டிற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளதால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழு ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளது. அதில், "மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் கதவைத் திறப்பதற்கான கவுண்டவுன் இப்போது தொடங்குகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.