ADVERTISEMENT

கவிதாலயா நிறுவனத்தின் புதிய திட்டம்!

10:12 AM Jul 11, 2018 | vasanthbalakrishnan

இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பிறந்த நாள் விழா 'ஒரே ஒரு பாலச்சந்தர்' என்ற பெயரில் கடந்த 10 ஜூலை அன்று சென்னையில் கே.பாலச்சந்தர் அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் நாசர், இயக்குனர்கள் வசந்த், சரண், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பாலச்சந்தரின் நண்பர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நிகழ்ச்சியின் போது, பாலச்சந்தரின் மகளும் கவிதாலயா நிறுவனத்தின் பொறுப்பாளருமான புஷ்பா கந்தசாமி, கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். "என் தந்தை பாலச்சந்தர், எப்பொழுதும் எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பார், செயல்படுவார். அதனால்தான் சினிமா உலகம் செழிப்பாக இருக்கும்போதே, அங்கு அவர் முழுவீச்சில் படங்கள் இயக்கியபோதே, தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்கினார். அப்பொழுதே அவர் சொன்னார், "எதிர்காலத்தில் டிவிதான் ஆளப்போகிறது" என்று. அதுபோலவே தொலைக்காட்சி ஊடகம் விஸ்வரூபம் எடுத்தது. அவரது வழியிலேயே எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கவிதாலயா தன் புதிய அவதாரத்தை எடுக்கிறது. எங்கள் நிறுவனம் டிஜிட்டல் மீடியாவில் இறங்கவிருக்கிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் எங்கள் முதல் டிஜிட்டல் படைப்பு அமேசான் ப்ரைமில் வெளிவர இருக்கிறது" என்றார்.

இயக்குனர் கரு.பழனியப்பன், "பாலச்சந்தர் அவர்களின் நினைவைப் போற்றுவது என்பது அவர் செய்ததை தொடர்வதுதான். ஒரே நேரத்தில் ஒரு ஹீரோயிச மாஸ் படமும் இயக்குனரின் படமாக ஒன்றையும் தயாரிப்பது அவரது பாணி. எனவே கவிதாலயா நிறுவனம் அது போலவே தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே புஷ்பா கந்தசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். "கவிதாலயாவின் டிஜிட்டல் படைப்பை அறிமுகம் செய்ய தனி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இப்போது கரு.பழனியப்பன் அன்புடன் கேட்டுவிட்டதால், இதை இங்கே அறிவிக்கிறோம்" என்றார்.

தமிழ் சினிமாவில் நூறு படங்களுக்கு மேல் இயக்கி வெற்றிகரமாகவும் பல புதுமைகளை செய்தவராகவும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பெரிய ஆளுமைகளை வடித்தவராகவும் திகழ்ந்த பாலச்சந்தர், டிவியின் ஆரம்ப கட்டத்திலேயே அதிலும் இறங்கி பல சூப்பர்ஹிட் தொடர்களைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT