'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா' சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கன்னடத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு இன்று (15.10.2022) வெளியாகிவுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள், சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிம்பு முன்னதாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கேக்கை அனுப்பி வைத்தார். சமீபத்தில் கூட நடிகர் தனுஷ், காந்தாரா படம், பிரம்மிப்பாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் காந்தாரா படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, 'காந்தாரா' படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அந்த சந்திப்பின் போது கார்த்தி, ''வாழ்த்துகள். படம் ஃபென்டாஸ்டிக். என்னுடைய மைத்துனன் என்னிடம் 'இந்தப்படத்த பாருங்க. நான் அழுத்துட்டேன். கையெல்லாம் நடுங்குது' எனக் கூறினார். படம் சிறப்பாக உள்ளது'' எனப் பாராட்டினார். அப்போது பேசிய படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, ''சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் நோக்கம்'' என்றார்.