சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா ரணாவத், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அண்மையில் எலான் மஸ்க் பேட்டியை பகிர்ந்து, "நான் விரும்புவதை கூற யாரும் தடுக்க முடியாது. இதே போல் தனக்கு பிடித்ததை செய்யும் எலான் மஸ்க்கை நான் பாராட்டுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கோவிலுக்கு ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து வரக்கூடாது என்பது போல் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் ஒரு நபர், "இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சிவன் கோவிலான பைஜ்நாத்தின் கோவிலில் பப் அல்லது நைட் கிளப்புக்கு செல்வது போல் வந்துள்ளனர். இது போன்றவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. அதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இதையெல்லாம் பார்க்கும் போது என்னுடைய சிந்தனை சிறியது என்றோ கெட்டது என்றோ சொன்னால் அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே" என பதிவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா, அவர் கருத்துக்கு ஆதரவு தரும் விதமாக "இவை மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை. நான் ஒரு முறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து சென்றேன். அப்போது என்னை வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை, நான் மீண்டும் எனது ஹோட்டலுக்குச் சென்று உடை மாற்ற வேண்டியிருந்தது. சாதாரணமாக இரவு ஆடைகளை அணியும் அவர்கள் கோமாளிகள் மற்றும் சோம்பேறிகள். அத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிகள் விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா ரணாவத், இப்போது 'எமர்ஜென்சி' என்ற தலைப்பில் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைப் படமாக இயக்கியும் நடித்தும் வருகிறார். தமிழில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ளார்.