'கூட்டத்தில் ஒருவன்', 'ஜெய் பீம்' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஞானவேல். குறிப்பாக உண்மை சம்பவத்தை தழுவி சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய 'ஜெய் பீம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் ஞானவேல்.
இந்நிலையில் ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ஜங்க்லீ பிக்சர்ஸ்' இந்தியில் தயாரிக்கவுள்ள புது படத்தை 'தோசை கிங்' என்ற தலைப்பில் ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் இந்தியில் ஞானவேல் அறிமுகமாகவுள்ளார். இப்படம் பிரபல உணவு நிறுவனத்தின் நிறுவனர் ராஜகோபால் மீது அதிர்ச்சியூட்டும் குற்றங்களை சுமத்தி 18 வருட போராட்டத்திற்கு பிறகு அவருக்கு தண்டனை பெற்று தந்த ஜீவஜோதி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 'ஜங்க்லீ பிக்சர்ஸ்' நிறுவனம் இதற்கான உரிமையை கைப்பற்றியிருந்தது.
ராஜகோபால், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றார். மேலும் அந்த தண்டனை காலத்திலே ராஜகோபால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.