இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி மற்றும் மாமனிதன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவா இருக்கும் இளையராஜா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்யூனை வெளியிட்டு அதற்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் வரிகள் எழுதி அனுப்புங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் இளையராஜா ஒரு வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்களே உங்கள் ஆர்வத்தை பார்க்கும் பொழுது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அடை மழை, கனத்த மழை, தாழ்வு அழுத்த மண்டலம் இதை எல்லாம் தாண்டி உங்கள் அன்பு மண்டலம் பீறிட்டுக் கொண்டு வருவதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. உங்களின் திறமை எவ்வளவு என்று எனக்கு தெரியும், என்னுடைய ட்டினுக்கு ரசிகர்கள் வரிகள் எழுதி அனுப்புகிறீர்கள். நீங்கள் அனுப்பும் வரியில் எது நன்றாக இருக்கிறதோ அது தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கப்படும். தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட பிற மொழிகளில் பாடல் வரிகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தமிழ் மொழியில் மட்டும் தான் வருகிறது. இன்னும் ரசிகர்கள் எழுதிக் கொண்டிருப்பதால் விரைவில் என் தேர்வை வெளியிடுகிறேன் " எனத் தெரிவித்துள்ளார்.
இளையராஜா தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திற்கு இசையமைத்து வருவதால் இதில் தேர்வாகும் பாடல் விடுதலை படத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.