அந்த வீடியோவில் அழுதபடியே பேசிய அந்த சிறுவன், "எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்" எனக்கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளான்.
இந்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அந்த சிறுவனின் தாய், "ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன். சக மாணவர்களை கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். குவாடனின் உயரத்தை கேலி செய்து அவன் தலையில் ஒரு மாணவன் அடிப்பதை நானே நேரில் பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்து பிரச்சனை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்" என தெரிவித்துள்ளார். கேலி செய்யப்பட்டதால் மனம் வெதும்பி அழும் இந்த சிறுவனின் வீடியோ உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த சிறுவனுக்கு ஆதரவு குரல்கள் உலகமெங்கிலும் வலுத்துக்கொண்டே வருகிறது. உலக பிரபலமான ‘எக்ஸ் மேன்’ ஹூக் ஜேக்மேன் தனது ஆதரவை அச்சிறுவனுக்கு சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல மலையாளம் மற்றும் தமிழ் சினிமாக்களில் பிரபல நடிகரான அஜய்குமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், “அன்புள்ள சிறுவனுக்கு நானும் உன்னைப்போன்றவன்தான், உன்னைபோல நானும் ஒரு முறை அழுதிருக்கிறேன். அந்த கண்ணீர் என்னுடைய எதிர்கால பயணத்திற்கான எரிபொருளாக மாறியது. நீ எப்போது அழுகின்றாயோ அப்போது உன் தாய் தோற்றுவிடுவார்” . உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு இதுவே நமக்கு சரியான நேரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜய்குமாரின் உயரம் 2 அடி 6 இன்ச் ஆகும். ஒரு படத்தில் முழுவதும் நடிகராக நடித்த முதல் குள்ளமான நடிகர் என்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.