Skip to main content

மிரட்டிய மேக்ஸ்வெல்! மெர்சல் ஆன இந்திய பவுலர்கள்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான மூன்றாவது டி20 கவுகாத்தியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 5 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். 24/2 என்ற நிலையில் கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார். ருதுராஜ் ஒரு முனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் சூரியகுமார் வழக்கம்போல தனது அதிரடியை காட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்காமல், கேப்டன் சூர்யகுமார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

தொடர்ந்து திலக் வர்மா ருதுராஜ் இணை ஆரம்பத்தில் சற்று பொறுமையாக ஆடியது. பின்னர் தனது அதிரடி துவங்கிய ருத்ராஜ் ஆஸ்திரேலிய பந்து வீச்சில் ருத்ர தாண்டவம் ஆடினார். திலக் வர்மா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ருதுராஜ் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சிக்ஸர் அடித்து 52 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் முதல் டி20 சதமாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்தார். மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ருத்ராஜ் 123 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில்  ஒருவரான ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் ஆவேசமாக ஆடத் தொடங்கினார். ஆவேஸ் கான், ஹெட்டை 35 ரன்களுக்கு ஆட்டம் இழக்க செய்தார். அடுத்து வந்த இங்கிலீஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இணை ஓரளவு நிலைத்து ஆட, ஸ்டாய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். பின்னர் இணைந்த வேட், மேக்ஸ்வெல் இணை சிறப்பாக ஆடியது. பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தும் பயனளிக்கவில்லை. 47 பந்துகளில் சதம் கடந்த மேக்ஸ்வெல், ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து வெற்றி தேடித் தந்தார். 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வேட் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஒவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

- வெ.அருண்குமார்  

 

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.