ADVERTISEMENT

"கரோனாவை தடுக்க முக்கியமான நான்கு விஷயங்கள்" - சத்யராஜ் அறிவுரை!

06:36 PM May 25, 2021 | santhosh

ADVERTISEMENT

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் சத்தியராஜ் கரோனா சமயத்தில் வெளியே செல்வது குறித்து வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார். அதில்..

ADVERTISEMENT

"மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம். இது ஒரு சோதனையான காலகட்டம். இதிலிருந்து வெளியே வரத் தேவையான விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். கரோனாவைத் தடுக்கத் தேவையான முக்கியமான மூன்று விஷயங்கள் நம் அனைவருக்கும் தெரிந்ததே. முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி. கூடுதலாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நம் குடும்பங்களில், நண்பர்கள் வீட்டில் சுப காரியங்கள், துயரச் சம்பவங்கள் என நடக்கின்றன. நம்மிடம் இருக்கும் பிரச்சினையே, இந்த விழாவுக்குச் செல்லவில்லை என்றால் என்ன நினைப்பார்கள், சம்பந்தி வீட்டில் என்ன பேசுவார்கள், உறவினர்கள் கோபித்துக் கொள்வார்களே, பங்காளிகள் தப்பாக நினைப்பார்களே, ஊர் என்ன பேசும் என்றெல்லாம் யோசிப்போம்.

இதற்கான தீர்வு என்னவென்றால் விழாவுக்கு அழைப்பவர்களே வரவேண்டாம் என்று சொல்வதுதான். வராமல் இருந்தால்தான் உனக்கும், எங்களுக்கும் நல்லது என்று சொல்ல வேண்டும். போகவில்லையென்றால் தப்பாக நினைப்பார்களோ என்கிற குற்ற உணர்வு வராமல் இருக்க இது உதவும். இன்று இருக்கும் தொலைத்தொடர்பு சாதனங்களின் உதவியுடன் இருக்கும் இடத்திலிருந்தே பார்க்கலாம். நிறைய தடுப்பூசிகள் வர ஆரம்பித்துவிட்டன. கரோனா என்பது இன்னும் சில மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ இல்லாமல் போகும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நாமே கரோனா குறித்து எதுவும் முடிவு செய்யக் கூடாது. முறையான மருத்துவர் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

அது மிக மிக முக்கியம். சிறப்பான அரசு அமைந்திருக்கிறது. மக்களுக்காக அற்புதமான களப்பணியை ஆற்றி வருகின்றனர். நாம் அவர்களுடன் கை கோக்க வேண்டிய காலமிது. நம்மையும் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டிய அவசரத்தில், அவசியத்தில் நாம் இருக்கிறோம். கரோனாவை வென்றெடுப்போம். கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். உலகத்துக்கே முன்மாதிரியாக தமிழ்நாடும், தமிழ் மக்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT